இந்தியா முழுவதும் ஒக்சிசன் தேவை அதிகரித்துள்ளதால், ஒக்சிசன் உற்பத்தி செய்ய மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், ஒக்சிசன் தேவையும் அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் ஒக்சிசன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் சோகமும் நடந்து வருகிறது.
இதனையடுத்து ஒக்சிசன் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரயில்கள் மூலமும் ஒக்சிசன் நிரப்பப்பட்ட லொறிகளில் தேவையுள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
இருப்பினும், வைத்தியசாலைகளில் திரவ ஒக்ஸிசன் பற்றாக்குறை நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு, மே மாதம் மக்களின் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், ஒக்சிசன் தயாரித்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க அனுமதி தருமாறு ஸ்டெர்லைட் ஆலை உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்தது.
வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ‛நாள் ஒன்றுக்கு 1,050 மெட்ரிக் டன் திரவ ஒக்ஸிசன் உற்பத்தி செய்யும் திறனுடைய உற்பத்திக்கூடத்தில் தற்போதைய நிலையில், நாள் ஒன்றுக்கு 500 மெட்ரிக் டன் திரவ ஒக்ஸிசன் உற்பத்தி செய்து அனுப்ப தயாராக இருக்கிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (22.04.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துசார் மேத்தா ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என வாதிட்டார்.
அவரது பதில் மனுவில், ‛ஒக்சிசன் மட்டும் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம். நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஒக்ஸிசன் தேவை அதிகரித்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தரலாம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment