ஆட்சியைக் குறை கூறுவதைத் தவிருங்கள், போலித் தேசிய பிரதிநிதியை உருவாக்கிய சமூகத்தை உற்றுப் பாருங்கள் - ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 15, 2021

ஆட்சியைக் குறை கூறுவதைத் தவிருங்கள், போலித் தேசிய பிரதிநிதியை உருவாக்கிய சமூகத்தை உற்றுப் பாருங்கள் - ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்

பிரதிநித்துவ மக்களாட்சி நடைபெறுகின்ற நாட்டில் தரம் தாழ்ந்த போலித் தேசிய அரசியல் சூழல் நிலவுகிறது என்றால் அதற்காக ஆட்சியைக் குறை கூறுவதைத் தவிர்த்து அந்த போலித் தேசிய பிரதிநிதியை உருவாக்கிய சமூகத்தை உற்றுப் பாருங்கள், உங்களுக்குப் புரிந்துவிடும் என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட பிரதி நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணியில் இடம்பெற்ற சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இடம்பெற்றபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சமீபத்தில் கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் கோவிலில் பௌத்த விகாரை கட்டப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கத்தின் கீழுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தாராம்.

இவ்விவகாரத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போமானால், கடந்த நல்லாட்சி அரசில், இந்த நாடு பௌத்த நாடு என்பதை நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அங்கீகரித்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே.

அதே போன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆயிரம் விகாரைகள் கட்டப்படுமெனவும் அதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போது அதற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, சம்பந்தன் ஐயா கேட்டுக்கொண்டபடியினால் மனச்சாட்சியை கட்டுப்படுத்திக் கொண்டு வாக்களித்தோம் என ஒப்பாரிவைத்து மக்களை ஏமாற்றியவர்களும் கூட்டமைப்பினரே.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐந்து கட்சிகள் பல்கலைக்கழக மாணவர் சமூத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான நிபந்தனைகளின் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கலாம் எனக் கூறி, பொது உடன்படிக்கையில் கையொப்பமிட்ட பின்னர் அதனைத் தூக்கியெறிந்து, ஆயிரம் விகாரைகள் கட்டுவேன் என சூளுரைத்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் கூட்டமைப்பினரே.

தமிழர் பிரதேசங்களில் தொல்பொருள் ஆராச்சி திணைக்களம் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்ட போதும் அதற்கு பொறுப்பாக இருந்த சஜித் பிரேமதாஸவை வரலாற்றுப் பெருமைகொண்ட சங்கிலியன் பூங்காவிற்கு குதிரை வண்டிலில் அழைத்து வந்து சடங்கு செய்து அனுப்பியவர்களும் கூட்டமைப்பினரே. இவ்வாறு பல்வேறு வகையிலும் வடகிழக்கில் விகாரைகள் அமைவதற்கு சட்டரீதியான மூலகாரணியாகவும் சூத்திரதாரியாகவும் செயற்பட்ட திரு சுமந்திரன் அவர்கள் மக்களாட்சி அரசு பொறுப்பேற்றதன் பின்னர், சகட்டுமேனிக்காக அறிக்கையிட்டு வருகிறார்.

நல்லாட்சி அரசு என்ற அரசியில் பௌத்தமயமாக்கலுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியவர்கள் இப்போது மாகாணசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு போலித் தேசியம் பேச முனைகின்றனர். கடந்த ஆட்சியில் கூட்டமைப்பின் தயவில் ஆட்சியமைத்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் இவற்றைப் பேசித் தீர்த்திருக்க முடியும். இன்று கூட இலங்கை பௌத்த நாடு என்பதே கூட்டமைப்பின் வலுவான நிலைப்பாடு. அதனை சுமந்திரன் மறுக்குமுடியுமா? ஆனால் எமது கட்சியின் நிலைப்பாடு இலங்கை மதசார்பற்ற நாடு என்பதே ஆகும். ஆதனை கடந்த அரசின் அரசியலமைப்பு பேரவைக்கு எழுத்து மூலமாகவும் வழங்கியுள்ளோம்.

பொதுவாக ஒரு நாட்டின் அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் பணியை அரசியல் கட்சிகள்தான் செய்கின்றன. மக்களை உயர்நிலைக்கு இட்டுச் செல்வதும் தாழ்நிலைக்கு கொண்டு செல்வதும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளைப் பொறுத்ததே எனவும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளாகிய நீங்கள், போலித் தேசிய பிரதிநிதியை உருவாக்கிய சமூகத்தையும் உற்றுப் பாருங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment