பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாக ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் 37வது மாதாந்த பொதுச்சபை அமர்வு புதன்கிழமை (28) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற போது விசேட உரையொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிட்டதாவது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் உலமாக் கட்சி தலைவர் பஸில் ராஜபக்சவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கல்முனை உப பிரதேச செயலமாக தரம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிய கிடைத்திருக்கின்றது.
றிசாட் பதியுதீன் மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அல்லாத ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் உலமாக் கட்சித் தலைவரும் இணைந்து செயற்பட்டதாக ஒரு வதந்தி வருக்கின்றது.
இவ்விடயம் தொடர்பாக கடந்த 35 வருடங்களாக குழப்பப்பட்டு வருகின்றோம். தமிழ், முஸ்லீம் மக்களைக் குழப்புகின்ற சக்தியொன்று இதன் பின்னணியிலிருந்து செயற்படுகின்றதா? என்ற சந்தேகமும் நிலவுகின்றது. தற்போது முஸ்லீம், தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமைக்கீற்று ஏதோவொரு வழியில் வெளிப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பிக்களான கோவிந்தன் கருணாகரம், செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் முறையிட்டிருந்தார்கள்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் பிரதேச செயலகம் குறித்த வெளிவந்த கடிதத்தின் அமுலாக்கத்தினை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
இது தவிர, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் பேசியிருந்தார். முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடி ஆட்சேபனையினையை முன்வைத்திருந்தார்.
கடந்த கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தின் போது நாங்கள் ஆதரவினை வழங்கிய போது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும். இது நியாயமான தமிழ் மக்களின் கோரிக்கை. அவர்களுக்குரிய உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். அதை மனப்பூர்வமாக ஆதரிப்பதாகவும் பதிவு செய்திருந்தார்.
இப்பிரதேச செயலக தரமுயர்த்தும் போதும் பிரிக்கப்படும் போதும் முஸ்லீம் மக்களுக்கு பாதகமாகமொன்றும் இடம்பெறக்கூடாதென்றும் செல்லியிருந்தார் எனக்கூறினார்.
இந்த அடிப்படையில், நாங்கள் நிதானமாக இருந்து தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பிரதேச செயலகத்தினை வழங்க முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இது சம்பந்தமாக பிற்காலத்தில் நாங்கள் ஒற்றுமையுடன் செயற்படுவோம் என மேலும் தனதுரையில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment