முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தினர்கள் பலரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது நாட்டில் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர் அதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே மேற்கொண்டிருந்தது. கூட்டமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலேயே இடம்பெற்றது.
அதற்கிணங்க மேற்படி கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் தெரிவிக்கப்படும் என அப்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனை அமைச்சர் மஹிந்த அமரவீர வெளியிட்டிருந்தார்.
ஹெல உறுமய கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி உட்பட 11 கட்சிகளின் தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தனர்.
அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டே மேற்படி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
அந்தப் பேச்சு வார்த்தையின் போது மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment