(செ.தேன்மொழி)
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று மணித்தியால விசேட சுற்றிவளைப்பின் போது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்பட்ட ஏழு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய மேல் மாகாணத்தில் மதுபான விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றில் நேற்று இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 5700 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், 930 மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் ஹோட்டல்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன. கொழும்பை அண்மித்த பகுதிகளிலும், களுத்துறை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளிலுமே இவ்வாறு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயற்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment