(எம்.மனோசித்ரா)
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதால், சகல மாவட்டங்களிலும் 200 படுக்கை வசதிகளைக் கொண்ட இடைநிலை பராமரிப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரச மற்றும் தனியார் கட்டடங்களை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது வேகமாக பரவியுள்ள பி 117 வைரஸ் கட்டுப்படுத்தலுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட சகல தரப்பினருடனும் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடல் தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது வைத்தியசாலைகளில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேவேளை, அவர்களுக்கான ஒட்சிசன் தேவையும் அதிகரித்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
எனவே வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் விநியோகிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அவசர தேவை ஏற்படும் போது அதனை துரிதமாக பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் சிகிச்சைகளுக்கான பிரத்தியேக வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் சிலிண்டர்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மோசமான நிலையில் இன்றி, எனினும் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கக் கூடிய தொற்றாளர்களுக்கான சிகிச்சை பிரிவுகளை உருவாக்குவதற்கும், அதற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சகல மாவட்டங்களிலும் 200 சிகிச்சை படுக்கைகளைக் கொண்ட இடைநிலை பராமறிப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக அரச மற்றும் தனியார் கட்டடங்களையும் பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் சுவசெரிய அம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment