சட்டமூலமாக தயாரிக்கப்பட்டு வரும் புதிய கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக்குழு (COPA) கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
தேசிய அபிவிருத்தித் திட்டத்தில் கல்வி முறைமை அத்தியாவசியம் என்பதால், விரைவான அபிவிருத்திக்கு பாடசாலை கல்வி தொடர்பான தேசிய கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்ற தெரிவுக்குழு பரிந்துரைத்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் மே மாதத்திற்குள் குறித்த அறிக்கையை அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு சமர்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய தேசிய கல்விக் கொள்கையை தயாரிக்கும் போது பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை இல்லாதொழிப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் பல்கலைக்கழக உபவேந்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலைப் பீட பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பை 50 வீதம் வரை அதிகரிக்குமாறும் அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தொடர்பாடல் திறன்களை விருத்தி செய்வதற்காக ஆங்கில மொழிக் கற்கையை மேலும் வலுப்பெறச் செய்ய வேண்டும் என அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment