அறிக்கையின் மீது கத்தோலிக்க மக்கள் சந்தேகம் கொள்வது அநாவசியமானது - அபிவிருத்திகளை முன்னெடுக்கும் போது இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுவது பொதுவானது : அமைச்சர் ஜோண்ஸ்டன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 23, 2021

அறிக்கையின் மீது கத்தோலிக்க மக்கள் சந்தேகம் கொள்வது அநாவசியமானது - அபிவிருத்திகளை முன்னெடுக்கும் போது இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுவது பொதுவானது : அமைச்சர் ஜோண்ஸ்டன்

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் யோசனைகள் அனைத்தும் முழுமையாக செயற்படுத்தப்படும். அறிக்கையின் யோசனைகள் மீது கத்தோலிக்க மக்கள் சந்தேகம் கொள்வது அநாவசியமானது. குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ராகம பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்துங்கள் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரே தீர்மானம் எடுப்பார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் அனைத்தும் முழுமையாக செயற்படுத்தப்படும். இவ்விடயத்தில் கத்தேலிக்க மக்கள் சந்தேகம் கொள்வது அநாவசியமானது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கையினை கொண்டு எதிர்த்தரப்பினர் பாராளுமன்றிலும், பொது மேடைகளிலும் அரசியல் இலாபம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

அறிக்கையில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்டு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாதுகாத்துக் கொள்ள மக்களுக்கு துரோகமிழைக்க முடியாது. பேச்சுவார்த்தைகள் ஊடாக பல விடயங்களுக்கு தீர்வு காண்பது அவசியமானதாகவும் காணப்படுகிறது.

அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் போது இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுவது பொதுவானதாக காணப்படுகிறது. இயற்கையினை பாதுகாக்க அரசாங்கம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. 

கிராமிய புற மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை கொழும்பில் இருந்துகொண்டு சுற்றுச்சூழல் அழிப்பு என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சுற்றுச் சூழல் பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு எதிர்த்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.

நாட்டு மக்கள் உண்மை தன்மையினை அறிவார்கள். குறுகிய மட்டத்தில் இருந்துகொண்டு செயற்படும் போது அனைத்து விடயங்களும் விமர்சனத்துக்குள்ளாக்கப்படும். போலியான குற்றச்சாட்டுக்களினால் அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி பணிகளை தடுக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment