புது வருட கொண்டாட்டங்களை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு தொகை தடுப்பூசி இந்தியாவிடமிருந்து கிடைக்கும் என்கிறார் அமைச்சர் சுதர்ஷினி - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 31, 2021

புது வருட கொண்டாட்டங்களை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு தொகை தடுப்பூசி இந்தியாவிடமிருந்து கிடைக்கும் என்கிறார் அமைச்சர் சுதர்ஷினி

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் கொண்டாட்டங்களை தமது குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் கொவிட்19 தொற்று பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோப்புள்ளே தெரிவித்துள்ளார். 

அத்துடன், ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு தொகை கொவிசீல்ட் தடுப்பூசி இந்தியாவிடமிருந்து கிடைக்கப் பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இரண்டாவது கொவிசீல்ட் தடுப்பூசியானது 10 வாரங்களுக்கும் 12 வாரங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வழங்கப்பட வேண்டும். அதற்காக இரண்டு இலட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகளை நாம் களஞ்சியப்படுத்தி வைத்துள்ளோம். இவ்வாரத்தில் இந்தியாவிடமிருந்து ஒரு தொகை தடுப்பூசி கிடைக்கப் பெறவுள்ளது.

கொவெக்ஸ் வேலைத்திட்டத்தின் கீழும் எமக்கு தடுப்பூசிகள் கிடைக்கப் பெறவுள்ளன. இத்திட்டத்தின் கீழ் 84 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும். இத்திட்டத்தில் இதுவரை இரண்டு இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக இதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதிகமானவர்களுக்கு ஒரு தடுப்பூசியை கொடுப்பதைவிட சிலருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் வழங்குவதன் மூலம் தொற்றை கட்டுப்படுத்தலாமென உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. இவ்வாறே தடுப்பூசிகள் பெற்றுக் கொண்ட தரப்பினரிடையே கொவிட்19 தொற்று பரவுவது குறைந்துள்ளது. 

உலகில் கொவிட்19 மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளது. இத்தாலி, பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கொவிட் 19 தொற்று அதிகரித்து வருகிறது. என்றாலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளவர்களுக்கு 62 சதவீதம் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகியுள்ளது. சுகாதார வழிகாட்டல்களை மக்கள் தொடர்ந்து பின்பற்றினால் மாத்திரமே தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். 

சிங்கள - தமிழ் புத்தாண்டு காலத்தில் மக்கள் ஒன்றுகூடும் கொண்டாட்டங்களுக்கு செல்லாது தமது வீடுகளில் குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் புத்தாண்டை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம். மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை முடிந்தளவு அனைவரும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment