இந்த மாத இறுதிக்குள் அரசு உரிய பதிலை கூற வேண்டும், இல்லையேல் பாதிக்கப்பட்ட மக்களை இணைத்து போராட்டம் - செல்வம் அடைக்கலநாதன் - News View

About Us

About Us

Breaking

Monday, March 8, 2021

இந்த மாத இறுதிக்குள் அரசு உரிய பதிலை கூற வேண்டும், இல்லையேல் பாதிக்கப்பட்ட மக்களை இணைத்து போராட்டம் - செல்வம் அடைக்கலநாதன்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக தற்போதைய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவினால் கடந்த அரசாங்கத்தினால் மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தற்போது வரை முழுமை அடையாத நிலையில் காணப்படுகின்றன. பல்வேறு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு மக்கள் பயன் அடைந்து வருகின்ற போதும் இறுதி நேரத்தில் மன்னார் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்பட்ட போதும், தற்போது வரை முழுமையடையவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று (08) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களை குறித்த வீட்டுத்திட்ட பயனாளிகளாக தெரிவு செய்வது வழமை. அவ்வாறு தெரிவு செய்யப்பட்டு வீட்டுத்திட்டங்களுக்கு என சுமார் 2 இலட்சம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை மேலதிக கொடுப்பனவுகள் எவையும் வழங்கப்படாமல் குறித்த மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அவர்கள் கடனை பெற்றுக் கொண்டு தற்போது கடனாளியாக உள்ளனர். பல்வேறு உடமைகளை அடகு வைத்து தற்போது அதனை மீட்டுக் கொள்ள முடியாத நிலையில் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது குறித்த வீடுகளை முழுமையாக கட்டி முடிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் வாய் திறக்க மாட்டேன் என சொல்லுகின்றார். நாங்கள் இந்த அரசாங்கத்திடம் கேள்விகளை கேட்டுள்ளோம். அரசாங்கம் குறித்த வீட்டுத்திட்டத்தை முழுமையாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தெரிவித்தும் இன்று வரை குறித்த வீட்டுத்திட்ட பயணாளிகளுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அரசாங்கத்திற்குள் உள்ள ஒரு திணைக்களம். எனவே தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கடந்த அரசாங்கத்தின் போது குறித்த வீட்டுத்திட்டங்களை வழங்கி விட்டார் என்பதற்காக இந்த அரசாங்கம் சாமானிய மக்களை பலிவாங்கக்கூடாது.

இந்த விடயத்தில் அரசாங்கம் சரியான ஒரு தீர்வை இந்த மாத இறுதிக்குள் வழங்கி மக்களுக்கு கொடுக்க வேண்டிய மிகுதி கொடுப்பனவை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இணைத்து வடக்கு கிழக்கில் போராட்டத்தை முன்னெடுக்கின்ற நிலை ஏற்படும்.

எனவே இந்த மாதத்தினுள் அரசு உரிய பதிலை கூற வேண்டும். பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்க உள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தும் பேச இருக்கின்றோம்.

அரசாங்கம் பாதீக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தக்கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அரசு மக்களின் பிரச்சினைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என தெரிவித்தார்.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment