(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு வரவேற்புத் தெரிவித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, அதன்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்களை விரைந்து வெளியிடுமாறும் வலியுறுத்தியிருக்கிறது.
இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை மேலும் கூறியிருப்பதாவது சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்குவது வெகுவாக காலந்தாழ்த்தப்பட்டிருந்தாலும், தற்போது அதற்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
முஸ்லிம் சமூகத்தினரின் மத ரீதியான நம்பிக்கையையும் உரிமையையும் மறுக்கும் வகையில் கட்டாயத் தகனத்தை நடைமுறைப்படுத்துவது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும்.
எனவே சிறுபான்மையினமான முஸ்லிம் சமூகத்தினரின் மத ரீதியான உரிமையைப் புறக்கணிக்கின்றதும் விஞ்ஞான ரீதியில் எவ்விதத்திலும் நிரூபிக்கப்படாததுமான ஒரு தீர்மானம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளமை உண்மையில் வரவேற்கத்தக்கதாகும்.
கட்டாயத் தகனம் தொடர்பான தீர்மானத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்களுக்குத் தற்போதைய தீர்மானம் ஆறுதலை அளித்திருக்கும்.
எனினும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டல்களை வெளியிடுவதில் தாமதம் காண்பிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் சிறுபான்மையின முஸ்லிம்களைப் புறந்தள்ளும் வகையிலான எவ்வித நடவடிக்கைகளும் இனியும் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும் வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment