இலங்கை தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்த இந்திய பெண்கள் - சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்தது சி.சி.டி. - News View

About Us

About Us

Breaking

Friday, March 26, 2021

இலங்கை தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்த இந்திய பெண்கள் - சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்தது சி.சி.டி.

(எம்.எப்.எம்.பஸீர்)

சுற்றுலா வீசாவில் இலங்கை வந்த இந்தியர்கள், சட்ட விரோதமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மற்றும் சிறுநீரக தானங்களை முன்னெடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் அந்த விசாரணைப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரியவுக்கு விஷேட அறிக்கையையும் நேற்றுமுன்தினம் சமர்ப்பித்துள்ளது.

கொழும்பில் இரு தனியார் வைத்தியசாலைகளில் இந்திய பெண்கள் இருவர் திடீரென உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவர்கள் சிறுநீரக தானத்தின் போதா உயிரிழந்தனர் என்பதை கண்டறிய விசாரணை ஒன்றினை நடத்துமாறு இந்திய உயரிஸ்தானிகராலயம் கோரியிருந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முன்வைக்கப்ப்ட்ட குறித்த கோரிக்கைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாத காலப் பகுதியிலேயே இரு இந்திய பெண்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் மரணத்துக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக தானமாக இருக்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரு இந்தியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்திருந்ததாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

உயிரிழந்த இரு இந்திய பெண்களினதும் சடலங்கள் இந்தியாவுக்கு எடுத்து செல்லப்பட்டு அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்கள் இலங்கையின் குறித்த வைத்தியசாலைகளில் எதற்காக சிகிச்சை பெற்றனர் என்பது தொடர்பில் பூரண விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டது.

அதன்படி அந்த பெண்கள், குறித்த வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்டமை எதற்காக, பெற்றுக் கொண்ட சிகிச்சைகள் எவை, மரணத்துக்கான காரணம் என்ன, என்பவை உள்ளிட்ட முழுமையான அறிக்கையொன்றினை சி.சி.டி.யினருக்கு வழங்க குறித்த வைத்தியசாலைகளுக்கு உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிமன்றைக் கோரினர்.

இதனை ஆராய்ந்த மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, சி.சி.டி. கோரும் அனைத்து தகவல்கலையும் வழங்குமாறு குறித்த வைத்தியசாலைகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன் விசாரணைகளை முன்னெடுத்து மேலதிக விடயங்களை தெரியப்படுத்துமாறும் அவர் பொலிஸாருக்கு அறிவித்தார்.

No comments:

Post a Comment