சட்ட மாணவன் மிகார குணரத்ன மீதான தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து பொலிஸாரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற குறித்த தாக்குதல் தொடர்பில், அதனுடன் தொடர்புபட்ட குறித்த பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளை, உடனடியாக கைது செய்து, மனிதாபிமானமற்ற குறித்த தாக்குதல் தொடர்பில், தண்டனைக் கோவைச் சட்டம் மற்றும் சித்திரவதை சட்டத்தின் கீழ், அவர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறும் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் 3 கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் மகனான மிகார குணரத்ன, சிறையிலுள்ள ஒருவரின் வழக்கு தொடர்பான விடயமாக பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற வேளையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தலின் பேரில், மேல் மாகாண வடக்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் கண்காணிப்பின் கீழ் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment