(எம்.மனோசித்ரா)
இந்தியாவில் தயாரிக்கப்படும் அஸ்ட்ரசெனேகா கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக அதனைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித கால தாமதமும் ஏற்படாது. தற்போது 4 இலட்சம் அஸ்ட்ரசெனேகா தடுப்பூசிகள் கையிறுப்பில் உள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
அமைச்சில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் அஸ்ட்ரசெனேகா கொவிட் தடுப்பூசிகளை வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்வதனை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக எமக்கு அவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்படவில்லை.
முதற்கட்டமாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை உரிய காலத்தில் பெற்றுக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் தற்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
இதுவரை இலங்கைக்கு 12 இலட்சத்து 64,000 அஸ்ட்ரசெனேகா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தற்போது 4 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ஏப்ரல் 10 ஆம் திகதியின் பின்னரே இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.
எனவே கையிருப்பில் உள்ள 4 இலட்சம் தடுப்பூசிகளை உபயோகித்து மே மாத இறுதி வரை இரண்டாம் கட்டமாகவும் தடுப்பூசிகளை வழங்க முடியும். எனவே இதில் எவ்வித கால தாமதமும் ஏற்படாது. இது தொடர்பில் இந்தியாவுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அத்தோடு மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உத்தியோகபூர்வமற்ற ரீதியில் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment