பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டை முழுமையாக பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் - ஐந்து அம்ச பிரேரணைகளை முன்வைத்துள்ள பெண் பிரதிநிதிகள் - News View

About Us

About Us

Breaking

Monday, March 22, 2021

பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டை முழுமையாக பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் - ஐந்து அம்ச பிரேரணைகளை முன்வைத்துள்ள பெண் பிரதிநிதிகள்

பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டை முழுமையாக பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் காணப்படுகின்றது. யாழ். மாவட்டத்தில் மொத்தமாக 100 பெண் பிரதிநிதிகள் உள்ளனர். இது 23 வீதமாகும். இந்நிலையில் பெண் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிக்கும் முகமாக பெண் வேட்பாளர்களை ஊக்கப்படுத்தும் திட்டத்தை நாம் கட்சி பேதமற்ற முறையில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பெண் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

பெண்களாகிய நாம் அரசியலில் ஈடுபட்ட பின்னர் மக்கள் அபிவிருத்திக்காக குரல் கொடுக்கும் வாய்ப்பு, பெண்களை பாதிக்கும் பிரச்சினைகள் பற்றி பேசும் வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. 

ஆகவே எதிர்கால தேர்தல்களில் பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் ஆர்வமாக உள்ளோம். அந்த வகையில் ஐந்து அம்சங்களை கொண்ட ஒரு பிரேரணையை முன்வைத்து நாம் செயற்பட விரும்புகின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஐந்து அம்ச பிரேரணைகள் பின்வருமாறு.

1. பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சமூகத்தில் சகல மட்டங்களிலும் ஊக்குவிக்கப்படல் வேண்டும். எந்த விதமான நிர்ப்பந்தமும் இன்றி, பெண்கள் தாமாகவே அரசியலுக்கு முன்வரவேண்டும்.

2. புதிய மற்றும் தகுதி வாய்ந்த பெண்கள் அரசியலில் பிரவேசிக்க வேண்டும். இதன் மூலம் 25 வீத இட ஒதுக்கீட்டை நாம் முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

3. இளம் பெண்கள் அரசியலுக்கு முன்வரவேண்டும். இளம் வயதினர் அரசியலில் ஈடுபட்டால் அதிக ஆர்வத்துடனும் செயல்திறனுடனும் அவர்களால் செயற்பட முடியும் என்பதை நாம் உணர்கின்றோம். எனவே இளம் பெண்கள் அதிகம் ஊக்கபடுத்தப்பட வேண்டும்.

4. ஜனநாயக விழுமியங்களை பாதுகாத்து சமூகத்திற்காக பணியாற்றக்கூடிய ஒரு பெண்ணை நீங்கள் அடையாளம் கண்டால் அவரை ஊக்கப்படுத்தி உங்களுடைய வாக்குகளில் முதன்மையான வாக்கை ஒரு பெண்ணுக்கு போடுவதன் மூலம் பெண்களின் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதனையும் நாம் எமது கோரிக்கையாக முன்வைக்கின்றோம்.

5. உள்ளுராட்சி மன்றங்களைத் தாண்டி சட்டங்களை ஒழுங்கமைக்கும் இடம் பாராளுமன்றமாக இருப்பதனால் பாராளுமன்ற தேர்தலில் பெண்களின் இருப்பும் நிலைநிறுத்தப்படல் வேண்டும்.

ஐகரன் சிவசாந்தன்

No comments:

Post a Comment