அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் இதற்கான விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரத்னபிரிய குருசிங்க ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து அதற்கான வெற்றிடத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் ரீதியிலான பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி அண்மையில் நியமித்தார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் தம்மிக்க பிரியந்த சமரகோன் ஜயவர்தனவின் தலைமையிலான இந்த ஆணைக்குழுவில் உயர்நீதிமன்ற நீதியரசர் குமுதுனி விக்ரமசிங்க உறுப்பினராக அங்கம் வகிக்கின்றார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையிலுள்ள பரிந்துரைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி கிடைத்திருந்தது.
குறித்த அறிக்கையில் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்து அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment