(ஆர்.யசி)
இலங்கையில் சீனா அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவ குவிப்பினைச் செய்யவில்லை. ஆகவே இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி அச்சமடைய வேண்டியதில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரகேசர தெரிவித்தார்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவ்விடயம் தொடர்பில் எழுப்பபட்ட வினாக்களும் பதில்களும் வருமாறு,
கேள்வி: அரசியல் ரீதியில் சீனாவின் தலையீடுகள் உள்ள காரணத்தில் இந்தியாவை ஓரங்கட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா?
பதில்: அவ்வாறு எந்த நாட்டினதும் நேரடி அரசியல் தலையீடுகள் எமக்கில்லை, சீனாவுடன் நாம் நல்லதொரு நட்புறவில் உள்ளோம் என்பதற்காக இந்தியாவுடன் நட்புறவை நாம் முறித்துக் கொள்ளவில்லை, அவர்களுடனும் வர்த்தக, கலாசார ரீதியிலான உறவு கையாளப்படுகின்றது.
ஆனால் இந்தியா இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட முயற்சிகள் எடுத்தால் அதுவே உறவை முறிக்கவும் காரணமாக அமைந்துவிடும். அதுமட்டுமல்ல இலங்கை - இந்திய உறவு 13 ஆம் திருத்தத்தில் தங்கியிருக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் நாட்டிற்கு உகந்த, இலங்கையால் சமாளிக்கக்கூடிய வேலைத்திட்டங்களே முன்னெடுக்க முடியும்.
கேள்வி: வடக்கில் மின் சக்தி அபிவிருத்தி திட்டத்தை சீனாவுக்கு கொடுத்தமை இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினையாகும் என்று கூறப்படுகின்றதே?
பதில்: வெறுமனே தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாட்டின் அபிவிருத்தியை கைவிட முடியாது. நாட்டிற்கு அபிவிருத்தி அவசியமானது. பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் இவ்வாறான தீர்மானங்களை நாம் முன்னெடுத்தாக வேண்டும்.
இலங்கையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மட்டுமே சீனா முன்னெடுக்கின்றது, மாறாக அவர்களின் இராணுவம் இங்கு குவிக்கப்படவில்லை.
இலங்கையின் கடல் எல்லை பாதுகாப்பு எப்போதுமே இலங்கை வசமே இருக்கும். ஹம்பாந்தோட்டையாக இருந்தாலும் யாழ்ப்பாணமாக இருந்தாலும் கடல் எல்லையை இலங்கை கடற்படையே பாதுகாக்கும்.
இதில் இந்தியா அச்சமடைய வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை. சீனாவினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் எதுவும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment