பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
ஜனாசா நல்லடக்க விடயத்தை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றினை நியமிக்க வேண்டும் எனவும் சுமந்திரன் ஐயா, சாணக்கியன் எம்பி, ஞானசார தேரர் கூட ஜனாசா நல்லடக்க பின்னணியில் பாடுபட்டுள்ளதாக அம்பாறை மாவட்டத்தில் சுயேச்சைக்குழு -2 என்கிற பெயரில் போட்டியிட்ட அரசியல் புரட்சிகர முன்னணியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா தெரிவித்தார்.
அம்பாறை ஊடக அமையத்தில் இன்று சமகால அரசியல் நிலைமை தொடர்பில் கருத்தக்களை முன்வைக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில், ஜனாசா நல்லடக்கம் தொடர்பாக வெளிவந்துள்ள வர்த்தமானி சகலரையும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளமை சந்தேகமில்லை.
ஆனால், இங்கு பல விதமான சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன. அரசாங்கம் அன்றிலிருந்து இன்று வரை சுகாதார நிபுணத்துவக் குழுவின் அனுமதிதான் இறுதி முடிவு எனக்கூறி வந்தது.
இந்த சுகாதார நிபுணத்துவக் குழு அன்று ஜனாசாக்களை அடக்கம் செய்ய விடாத காரணத்திற்கும் இன்று அனுமதி கொடுத்தமைக்கும் என்ன தொடர்பு?
இந்த நிலைமை இந்த நாட்டில் சர்ச்சையை எழுப்பியுள்ளதுடன், கேள்வியாகவுமுள்ளது.
இதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றினை நிறுவி, அன்று ஏன் கொடுக்க மறுத்தார்கள்? இன்று ஏன் அனுமதி கொடுத்தார்கள்? என்பதை ஆராய வேண்டுமென்பது எனது அபிப்பிராயமாகும். அதை அறியும் வரை நான் சாகவும் மாட்டேன். சும்மாவும் இருக்கவும் மாட்டேன் என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
மேலும், ஒவ்வொரு சமூகத்திலும் வித விதமான மக்கள் உள்ளனர். தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சுமந்திரன் ஐயா, சாணக்கியன் எம்பி ஆகியோர் ஜனாசா விடயத்தில் பாடுபட்டுள்ளனர்.
அது தவிர, சிங்கள சமூகத்தில் ஞானசார தேரர் கூட ஜனாசா நல்லடக்கத்திற்காக அங்கீகாரம் கொடுக்க பாடுபட்டவர். அவருக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.
இது போன்று அநேகர் அடக்கம் செய்யப்பட வேண்டுமெனக்கூறிக் கொண்டிருந்தனர். உலக சுகாதார இஸ்தாபனமும் அடக்கம் செய்யவே கூறியது. எனவே, இதனை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நிறுவ வேண்டும்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தும் விடயத்தில், அதற்கு பூரணமான அதிகாரம் வழங்க வேண்டும். இது தவிர, சாய்ந்தமருது நகர சபையும் வழங்க வேண்டும். என்பதில் உறுதியாகவுள்ளேன். இது தொடர்பில் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட உயிரைக் கொடுப்பேன் எனக்கூறியுள்ளேன் என்றார்.
No comments:
Post a Comment