கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக செலுத்த முடியாத நிலையிலிருந்த லீசிங் நிலுவைகள் தொடர்பில் முறையான செயற்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வெவ்வேறு நிதி கொள்கையை பின்பற்றாது லீசிங் சலுகைகளை வழங்கும் அனைத்து நிதி நிறுவனங்களும் ஒரே கொள்கையை பின்பற்றுவது அவசியமென்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள பாடசாலை போக்கு வரத்து சேவை வாகனங்கள், அலுவலக போக்கு வரத்து சேவை வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் தவணை நிலுவைகளை செலுத்துவதற்கு முறையான திட்டம் ஒன்றை தயாரிக்குமாறே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் சூழ்நிலையிலிருந்து நாடு இயல்பு நிலைக்கு வந்துள்ள நிலையில் வாகன உரிமையாளர்கள் தமது லீசிங் நிலுவைகளை சாதாரண விதத்தில் செலுத்துவதற்கான நிலைமை உருவாகியுள்ளது.
அத்தகைய சூழ்நிலையில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த லீசிங் நிவாரண காலத்தின் நிலுவையையும் சேர்த்து தற்போது வழங்குமாறு லீசிங் நிறுவனங்கள் வாகன உரிமையாளர்களை கோரியுள்ள நிலையில் மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தம்மால் முடியாதென்றும் வாகன உரிமையாளர்கள் நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment