(இராஜதுரை ஹஷான்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பாதுகாத்துக் கொள்ள உண்மையினை மூடி மறைக்க வேண்டிய தேவை கிடையாது. குண்டுத் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழு பொறுப்பினை ஏற்க வேண்டும் என அன்றும் குறிப்பிட்டோம், இன்றும் குறிப்பிடுகிறோம். இதில் எவ்வித மாற்றமும் கிடையாது என சமுர்த்தி, மனைபொருளாதாரம், தொழிலபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையிவ், நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான முரண்பாடுகள் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியது. அரச தலைவர்களின் முரண்பாட்டை அடிப்படைவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் அப்பாவி மக்கள் பலியானார்கள்.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அமைத்தார். ஆணைக்குழுவினர் சுயாதீனமாகவே விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்து கடந்த மாதம் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பழிவாங்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே அறிக்கையை ஏற்க முடியாது என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அறிக்கையினை விமர்சனத்துக்குள்ளாக்குவது தவறான செயற்பாடாகும்.
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் ஒரு பங்காளி கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளது. அரசாங்கத்தின் வசமுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாதுகாத்துக் கொள்ள உண்மைக்கு புறம்பாக செயற்பட வேண்டிய அவசியம் கிடையாது.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுக்கு சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் என அன்றும் குறிப்பிட்டோம், இன்றும் குறிப்பிடுகிறோம். அரசியல் இலாபத்துக்காக உண்மையினை மாற்றியமைத்துக் கொள்ள முடியாது என்றார்.
No comments:
Post a Comment