சீனாவில் கடந்த சில மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் செங் லீ, நாட்டு இரகசியங்களை வெளிநாட்டுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் உத்தியோகபூர்வமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவில் பிறந்த அவுஸ்திரேலியரான அவர் சீன அரச தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை சீன நிர்வாகம் நேற்று உறுதி செய்ததோடு, அவரது சட்ட உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தது.
கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்ட செங் மீது கடந்த வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர்.
சீனா கையாளும் இந்த வழக்கில் அவுஸ்திரேலியா தலையிடாது என்று எதிர்பார்ப்பதாக சீன அமைச்சரவை பேச்சாளர் வாங் வென்பின் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
எனினும் செங் கைது செய்யப்பட்டது தொடர்பில் அவுஸ்திரேலியா கவலையை வெளியிட்டுள்ளது. அவர் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது பற்றி எதுவும் தெரியாதுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment