இலங்கைக்கு எதிரான பிரேரணையை வெற்றி கொள்வதில் பிரித்தானியா உறுதி - தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, February 22, 2021

இலங்கைக்கு எதிரான பிரேரணையை வெற்றி கொள்வதில் பிரித்தானியா உறுதி - தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

(ஆர்.யசி)

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா கொண்டுவரும் பிரேரணையை வெற்றி கொள்வதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், இது குறித்து பேரவையின் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாகவும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹுல்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் பிரித்தானியா முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு பூரண ஒத்துளைப்புக்களை கூட்டமைப்பு எப்போதும் வழங்கும் எனவும், பிரித்தானியாவின் மேற்பார்வை கண்டிப்பாக இருக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சேரா ஹல்டனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த நகர்வுகளை பிரிதானியா கையாள்கின்ற நிலையில் அதில் தமிழர் தரப்பில் கூட்டமைப்பின் பங்களிப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும், கூட்டமைப்பின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுப்பது குறித்தும் பேசியுள்ளனர்.

இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் கூறுகையில், ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நான் தனிப்பட்ட முறையில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சேரா ஹல்டனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன்.

அப்போதும் பிரித்தானியா தலைமையில் ஐந்து நாடுகள் இணைந்து இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி கொண்டுவரும் பிரேரணை குறித்து பேசியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த கலந்துரையாடலை மீண்டும் முன்னெடுத்திருந்தோம். என்னுடன் ஸ்ரீதரன் எம்.பியும் கலந்துகொண்டிருந்தார்.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடைமுறையில் உள்ள விவகாரங்கள் குறித்தும் பேசியிருந்தோம், குறிப்பாக தற்போது கூடியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களை மீண்டும் கையாளவுள்ள நிலையில் இம்முறை பிரித்தானியா தலைமையில் கொண்டுவரும் பிரேரணையில் இலங்கையின் பொறுப்புக்கூறலை கடுமையாக வலியுறுத்தும் விதத்தில் அமைதல் வேண்டும் என்பதையும், பிரித்தானியாவின் மேற்பார்வை தொடர்ந்தும் இருக்கக்கூடிய விதத்திலான பிரேரணையை கொண்டுவர வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.

அதேபோல் பிரேரணையை வெற்றி கொள்ள உறுப்பு நாடுகளை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளமைக்கு நாம் எமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டோம்.

மேலும் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை கடுமையானதாக இருத்த போதிலும் கொண்டுவரும் பிரேரணையில் அவை முழுமையாக உள்வாங்கப்படவில்லை என்ற விமர்சனம் உள்ளது. எனினும் பிரேரணையை முழுமையாக வாசித்து விளங்கிக்கொள்ள வேண்டும் என்ற காரணிகளையும் அவர் முன்வைத்தார்.

அதேபோல் இந்த பிரேரணை கொண்டுவருவதன் மூலமாக பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதும் அதன் மூலமான நியாயங்களை பெற்றுக்கொடுப்பதுமே தமது நோக்கம் என்பதையும் அவர் வலியுறுத்தினார் என்றார்.

ஸ்ரீதரன் எம்.பி கலந்தரையாடல் குறித்து தெரிவிக்கையில், இம்முறை இலங்கை விடயத்தில் பிரித்தானியா கொண்டுவரும் பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றிக் கொள்ள பிரித்தானியா நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், பொறுப்புக்கூறல் விடயங்களில் பாதிக்கப்பட்ட தரப்புடன் தாம் எப்போதும் இருப்பதாகவும் அவர் எமக்கு தெரிவித்தார். அதேபோல் எமது பக்கம் நாம் வழங்க வேண்டிய முழுமையாக ஒத்துழைப்புகளை பெற்றுத்தருவதாக கூறியுள்ளோம்.

எமது மக்கள் இன்றும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுக்கொண்டுள்ளனர். அவர்களுக்கான நியாயங்களை பெற்றுக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எமது மக்களிடமே எழுந்துள்ளது. 

எனவே நாம் மக்களுக்காக செய்ய வேண்டிய கடமைகளை முழுமையாக செய்து முடிக்க தயாராக உள்ளோம் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம். பிரித்தானியா இப்போது பிரேரணை ஒன்றினை கொண்டுவந்தாலும் அதனை நிறைவேற்றுவதில் சவால்கள் உள்ளதையும் அவர் தெளிவு படுத்தினார். 

எனவே உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பிரேரணையை வெற்றிகொள்வதில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார் என்றார்.

No comments:

Post a Comment