கொவிட்-19 தொற்றின் அதிக அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளவர்களுக்கும் மேல் மாகாணத்தில் அதிக அச்சுறுத்தல் நிலவும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் கொவிட்-19 தடுப்பூசியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் பிரதம தொற்று நோயியல் மருத்துவ நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர நேற்று தெரிவித்தார்.
இத்தீர்மானத்திற்கு அமைய தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் கட்டம் கட்டமாக முழு நாட்டு மக்களுக்கும் இத்தடுப்பு மருந்து பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்று தவிர்ப்புக்கான தடுப்பு மருந்து வழங்கல், இத்தடுப்பு மருந்தைப் பெற்றுள்ள ஒரு சிலருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அளித்த விஷேட பேட்டியில் மேற்கண்டவாறு கூறினார்.
இப்பேட்டியில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, எமக்கு கிடைக்கப் பெறுகின்ற கொவிட்-19 தொற்று தடுப்பு மருந்தின் மூலம் உச்ச பிரதிபலன்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
அந்த வகையில் இத்தொற்று தவிர்ப்பு தடுப்பு மருந்து பெற்றுக் கொள்ள முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் பயனாக ஒரு தொகுதி தடுப்பு மருந்து அடுத்த வாரம் எமக்கு கிடைக்கபெற உள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்கனவே உறுதியளித்துள்ள கொவிட்-19 தடுப்பு மருந்தில் ஒரு தொகுதியும் அடுத்த வாரம் கிடைக்கப் பெறுமென எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மர்லின் மரிக்கார்
No comments:
Post a Comment