சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலையைத் தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சி - உலப்பனே சுமங்கல தேரர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலையைத் தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சி - உலப்பனே சுமங்கல தேரர்

(நா.தனுஜா)

சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலையைத் தோற்றுவிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. உக்ரேனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துவந்து, பிரென்டிக்ஸ் கொத்தணியையும் விட மிகப்பாரியளவில் 'உதயங்க கொத்தணியை' ஏற்படுத்தப் போகின்றார்கள் என்று வன்முறைகளைத் தோற்கடிப்பதற்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் எந்தளவிற்கு வெற்றியளித்துள்ளன என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.

இந்த அரசாங்கம் கொரோனாவை தமக்கான வசந்தமாக மாற்றிக் கொள்வதற்கும் அதனூடாக அரசியல் ரீதியான நன்மைகளை அடைந்து கொள்வதற்கும் முயற்சித்தது. அவ்வாறான நோக்கத்துடன் செயற்பட்டமையால், நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவலை மட்டுப்படுத்துவதற்குக் காணப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளும் வலுவிழந்தன.

இந்த நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்கான இயலுமை அரசாங்கத்திடம் காணப்படாமையின் விளைவாக தற்போது 200 இற்கும் அதிகமானோரின் உயிர்கள் பலியாகியிருப்பதுடன் பெருமளவானோர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

அதேபோன்று இதுவரை காலமும் நாட்டிற்குப் பெருந்தொகையான அந்நியச் செலாவணி வருமானத்தைப் பெற்றுத்தந்த வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களை நாட்டிற்கு மீண்டும் திருப்பியழைத்து வருவதற்கு அரசாங்கத்தினால் முறையான திட்டம் வகுக்கப்படவில்லை. 

மாறாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலையைத் தோற்றுவிப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உக்ரேனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து, பிரென்டிக்ஸ் கொத்தணியையும் விட மிகப்பாரியளவில் 'உதயங்க கொத்தணியை' ஏற்படுத்தப் போகின்றார்கள்.

இது சுற்றுலா அமைச்சினதோ அல்லது இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினதோ தேவைக்காக மேற்கொள்ளப்படவில்லை. மாறாக உதயங்க வீரதுங்க என்ற தனிநபரொருவரின் நலன்களைக் கருத்திற் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றது. 

கடந்த காலத்தில் நாட்டிற்கு நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அவரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் விளைவாகவே நாட்டிற்குள் நுழைவதற்கு உதயங்க வீரதுங்கவிற்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும் தற்போது அலரி மாளிகை, கொழும்பு - 03 என்பதையே அவர் தனது தனிப்பட்ட முகவரியாகப் பயன்படுத்துகின்றார்.

இது இவ்வாறிருக்க உக்ரேனிலிருந்து அழைத்துவரப்பட்ட சுற்றுலாப் பயணிகள் முறையான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவில்லை.

இலங்கையை விடவும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய ஒரு நாட்டிலிருந்து சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து, உரிய சட்டதிட்டங்களை மீறி அவர்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கி சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியமென்ன?

தற்போது உக்ரேனில் நாளொன்றுக்கு அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுவதுடன் அதிக எண்ணிக்கையான உயிரிழப்புக்களும் பதிவாகின்றன.

அதுமாத்திரமன்றி புதிதாக நிலைமாற்றமடைந்த 5 வகையான கொரோனா வைரஸ் அங்கு இனங்காணப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அவ்வாறானதொரு நாட்டிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து எமது நாட்டின் நிலைவரத்தை மேலும் மோசமாக்குவதற்கு அரசாங்கம் ஏன் முற்படுகின்றது? என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

No comments:

Post a Comment