மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களை நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்க முடியும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
ஆனால் சுகாதார திணைக்களம் பரிந்துரைத்துள்ள நடைமுறைகளுக்கு அமைவாகவே வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியாகவுள்ளதனால் அப்பகுதிக்குள் இருந்து வர்த்தக நடவடிக்கைகளுக்கு வர்த்தகர்கள் வரமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
தைப்பொங்கல் வரவுள்ளதனால் வர்த்தக நிலையங்களை நடாத்துபவர்களும் வருகை தரும் மக்களும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அனைத்து வியாபார நடவடிக்கைகளும் மாலை 7.00 மணியுடன் நிறுத்தப்பட்டு சுகாதார திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு வழிவிட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேபோன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பாக பூநொச்சிமுனை போன்ற பகுதிகளில் இருந்து ஊழியர்களோ, வர்த்தகர்களோ இங்கு வந்து வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment