சிறைச்சாலைகளில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று அபாயத்திலிருந்து தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைளை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாவகச்சேரி நகரில் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர் மற்றும் சிவில் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த இக்கவனயீர்ப்பு போராட்டத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் துணைவியார் சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாடாளவிய ரீதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை கொரோனா தொற்றின் ஆபத்திலிருந்து பாதுகாக்கும் முகமாக உரிய நடவடிக்கைகயை விரைந்து எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினார்கள்.
மேலும், ஆபத்தினை எதிர்நோக்கி உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மகஜரொன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.
அம்மகஜரில் விசேடமாக சிறையில் வாடும் கைதிகளில் 7 பேர் பெண்களெனவும் அவர்களில் ஒருவர் ஒன்றரை வயது குழந்தை ஒன்றின் தாய் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் தற்போது வரையில் தமிழ் அரசியல் கைதிகளில் 14 பேர் வரையிலானவர்கள் தொற்றுக்குள்ளாகியிருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த விடயத்தில் மனிதாபிமான ரீதியில் நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதன் பிரதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய தரப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment