பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம் - முகக் கவசம் அணிவது கட்டாயம் - கல்வியமைச்சு அதிபர்களுக்கு ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம் - முகக் கவசம் அணிவது கட்டாயம் - கல்வியமைச்சு அதிபர்களுக்கு ஆலோசனை

மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய மிகவும் பொறுப்புடன் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

மாணவர்கள் பாடசாலைக்கு வரும் போதும் பாடசாலைகளில் இருக்கும் போதும் பாடசாலைகளை விட்டு வெளியேறும் போதும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும்.

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு தொடர்ந்தும் முகக் கவசத்தை அணிந்திருப்பது அசௌகரியமாக இருக்குமானால் இடைவெளியை பேணும் சந்தர்ப்பங்களில் அதனை அகற்ற முடியும். 

பாடசாலைக்குள் பிரவேசிக்கும் போதும் அனைத்து மாணவர்களினதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் ஒன்று சேர்வதை தவிர்ப்பதாக வகுப்பு மட்டத்தில் ஓய்வு நேரம் வழங்கப்பட வேண்டும்.

மாணவர்கள் தமது வீடுகளிலிருந்து எடுத்து வரும் உணவு, குடிநீர் மற்றும் பாடசாலை உபகரணங்களை பரிமாற்றிக் கொள்ளக் கூடாது.

தூர இடைவெளியை பேணி, உடற் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். 

பிள்ளைகளின் மனநல சுகாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளின் அவசியம் குறித்தும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறுகள் உள்ள பிள்ளைகள், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள், கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் ஆகியோர் சுகாதார ஆலோசனைகள் கிடைக்கும் வரை பாடசாலைகளுக்கு வருவதை தவிர்குமாறும் அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment