பாணந்துறை வடக்கு, பல்லிமுல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (25) காலை 10.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், முச்சக்கர வண்டியில் பயணம் செய்த பயணிகளில் இருவரில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்
இச்சம்பவத்தில், 32 வயதான நபர் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
மரணித்தவர் ஒரு மீனவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, தனிப்பட்ட தகராறு காரணமாக இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என, பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இதன்போது சம்பவ இடத்தில் சுடப்பட்ட T56 வகை, 4 தோட்டா கோப்புகள் காணப்பட்டதாக, அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ள வந்த சந்தேகநபர்கள் முழுமையாக முகம் மூடப்பட்ட, தலைக் கவசத்தை அணிந்திருந்ததாகவும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு பாணந்துறை திசையில் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்தேகநபர்களை கைது செய்ய, பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ், பாணந்துறை வடக்கு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment