விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், சுமந்திரன் நாளை முக்கிய சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், சுமந்திரன் நாளை முக்கிய சந்திப்பு

(ஆர்.ராம்)

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கிடையில் நாளை புதன்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. 

கொழும்பில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் மேலும் சில துறைசார் நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகளும் பங்கேற்கவுள்ளதாக தெரிய வருகின்றது. 

இந்தச் சந்திப்பில் எதிர்வரும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்திய புதிய பிரேரணை தொடர்பான தமிழ்த் தரப்புக்கள் ஒன்றுபட்ட நிலைப்பாடொன்றை வெளிப்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஏற்கனவே புதிய பிரேணைக்கான முன்மொழிவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியத்தளத்தில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான செயற்பாடுகள் கடந்த டிசம்பர் 29ஆம் திகதி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டு நேற்று முன்தினம் வவுனியாவிலும் இரண்டாம் கட்டச் சந்திப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

வவுனியாவில் நடைபெற்ற சந்திப்பின்போது கஜேந்திரகுமார் பங்கேற்றிருந்தார். அதேநேரத்தில் விக்னேஸ்வரன் இந்த இரண்டு சந்திப்புக்களிலும் பங்கெடுக்கவில்லை என்பதோடு, அவர் சார்பில் கிளிநொச்சி கூட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளர் அருந்தவபாலன் கலந்துகொண்டிருந்தார். 

அத்துடன் அக்கூட்டணியைச் சேர்ந்த பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரான எம்.கே. சிவாஜிலிங்கம் கலந்துகொண்டிருந்தார். அக்கூட்டத்தின்போது, ஜெனிவா தீர்மானம் தொடர்பில் பல்வேறு கருத்தாடல்களும் கட்சிகளின் நிலைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டிருந்தது. 

இதில் பூரணமான இணக்கம் இன்னும் ஏற்படாத நிலையில் தற்போது அரசியல் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர். விசேடமாக கஜேந்திரகுமாருக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையிலான இடைவெளிகளை குறைப்பதை நோக்கமாகவும் கொண்டுள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment