நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாத்துவிட்டு இப்போது வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்தவர்கள் போன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி சிலர் பேசுகின்றனர் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் சபையில் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமைகள் குறித்தும் எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், வேற்றுக்கிரகத்தில் இருந்த புதிதாக வந்தவர்கள் போலவும் கோமாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் போலவும் அவர்களின் பேச்சுக்கள் இருக்கின்றது. நாங்கள் தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வை பெற்றுத் தருவோம் வடக்கு-கிழக்கு இணைப்பை தருவோம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை வழங்கி வந்தார்கள்.
அதைப்பற்றி பேசாமல் ஒரு சிலர் என்னை பற்றி விமர்சனம் செய்கின்றனர். அவருக்கு வாக்களித்த மக்கள் தான் பாவம். இவர்களுடைய வண்டி ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. கடந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் அந்த அரசாங்கத்தோடு இவர்கள் தேனிலவு கொண்டாடிக் கொண்டு குடும்பம் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் இந்த அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள், தொல்பொருள் சார்ந்த பிரச்சினை இருக்கவில்லையா.
இவர்கள் எந்த தீர்வையும் அந்த மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை.மாறாக கடந்த கட்சி அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை பாதுகாத்துக் கொண்டு இருந்தார்கள் .
தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ந்தால் இவர்களுக்கு அரசியல் தெரியாது. பிச்சைக்காரனும் புண்ணும் போன்றதே இவர்களின் அரசியல். கடந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை, அப்போதெல்லாம் வாய் திறக்காது வேடிக்கை பார்த்தனர்.
ஆனால் இன்று அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கொடுக்க முன்வந்துள்ளது.
வேலை வாய்ப்புகளை வழங்குகின்றது. நாம் பிரச்சினையை வைத்துக்கொண்டு அரசியல் செய்யவில்லை. எமது அப்பாவி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க இடமளியுங்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஒரு சிறுமி இறந்துபோனார். காரணாம் அவர்களுக்கு ஒரு வீடு இருக்கவில்லை.
இவ்வாறான அவல நிலை நிலவுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கஷ்டப்படும் நபர்களில் வெளிநாட்டில் இருக்கின்ற உறவுகளில் 90 சதவீதமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளனர். சம்பளம் இல்லாத நிலையில், வேலைவாய்ப்பு இல்லாது தவிக்கின்றனர். உயிரிழக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும். இன்று நாட்டில் தொழிற்சாலைகள் உருவாக்கப்படுகின்றது. உங்களின் வங்குரோத்து அரசியலை மக்களிடம் காட்ட வேண்டாம் என்றும் கூறினார்.
ஷம்ஸ் பாஹிம், நிஷாந்தன் சுப்ரமணியன்
No comments:
Post a Comment