(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அவர்களது மத நம்பிக்கைக்கு மாறாக கட்டயமாகத் தகனம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் தீர்மானத்திற்கு சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்பின் மனித உரிமைகள் நிறுவகம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து அவ்வமைப்பினால் மேலும் கூறப்பட்டிருப்பதாவது இஸ்லாமிய மதத்தைப் பொறுத்த வரையில் சடலங்களைத் தகனம் செய்வதென்பது ஒரு பாவமாகவும் மனித உடலுக்கு இழிவை ஏற்படுத்துவதாகவுமே நோக்கப்படுகின்றது.
எது எவ்வாறெனினும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களில் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. சடலங்களை அடக்கம் செய்வதால் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படப்போவதில்லை.
அவ்வாறிருக்கையில் தமது மத நம்பிக்கையின்படி ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான மத ரீதியான உரிமை இலங்கை முஸ்லிம்களுக்கு மறுக்கப்படும் பட்சத்தில், அது இலங்கை ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருக்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்திற்கு முரணானதாகவே அமையும்.
ஒரு மரணத்திற்கான கௌரவம், அவரவர் மத நம்பிக்கையின்படி இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்கான உரிமை என்ற உறுதி செய்யப்படுவதுடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.
ஆகவே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்யும் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, ஒவ்வொரு தனி நபரினதும் மதச் சுதந்திரத்தையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment