அடக்கம் செய்வதில் மாத்திரம் ஏன் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலை பின்பற்ற முடியாது - அரசாங்கம் விஞ்ஞானத்தை மறந்து சாஸ்திரத்தை நம்ப ஆரம்பித்திருக்கின்றது : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

அடக்கம் செய்வதில் மாத்திரம் ஏன் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலை பின்பற்ற முடியாது - அரசாங்கம் விஞ்ஞானத்தை மறந்து சாஸ்திரத்தை நம்ப ஆரம்பித்திருக்கின்றது : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொவிட் தொடர்பான அனைத்து விடயங்களையும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலின் பிரகாரமே மேற்கொள்வதாக தெரிவிக்கும் அரசாங்கம் மரணிக்கும் சடலங்களை அடக்கம் செய்வதில் மாத்திரம் ஏன் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலை பின்பற்ற முடியாது என அரசாங்கத்திடம் கேட்கின்றேன். அனைத்து இன மக்களதும் மத உரிமைகளை பாதுகாப்பதன் மூலமே நாட்டை பாதுகாத்துக் கொள்ளலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரியும் ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (23) பொரளை கனத்தை மயானத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஒருவர் மரணித்தால் அந்த நபரின் இறுதிச் சடங்கை அவர்களின் விருப்பத்தின் பேரில், அவர்களின் மத கலாசார அடிப்படையில் மேற்கொள்வது எமது நாட்டில் இருக்கும் அனைத்து மதத் தவர்களுக்கும் இருக்கும் உரிமையாகும்.

இன்று அரசாங்கம் விஞ்ஞானத்தை மறந்து சாஸ்திரத்தை நம்ப ஆரம்பித்திருக்கின்றது. இது பாரிய பேரழிவாகும். இதற்கு பிரதான காரணமாக இருப்பது, விஞ்ஞானம் தோல்வியுற்று, பொய், ஏமாற்று வெற்றி பெற்றிருப்பதாகும். 

விசேடமாக பெளத்தர்களுக்கு அவர்களின் இறுதிக் கிரியையை மேற்கொள்ளும்போது கடைப்பிடிக்கும் மத வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதேபோன்று ஏனைய மதத் தவர்களின் மத கலாசாத்துக்கு இடமளிக்க வேண்டும்.

அத்துடன் அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலை பின்பற்றும்போது, கொராேனாவில் மரணிக்கும் சடலங்களை அடக்கம் செய்யும் விடயத்தில் மாத்திரம் ஏன் அரசாங்கம் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்லை பின்பற்றாமல் இருப்பதற்கான காரணம் என்ன என கேட்கின்றேன். 

உலகில் 190 நாடுகள் இதனை பின்பற்றும்போது ஏன் எமது நாட்டுக்கு மாத்திரம் அதனை செய்ய முடியாது?. பெளத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதே தூய்மையான பெளத்த சிந்தனையாகும். 

மேலும் நாட்டின் நல்லிணக்கம், ஒருமைப்பாடு பாதுகாக்கப்படுவது, அனைத்து இன மக்களை ஒன்றிணைத்துச் செல்வதன் மூலமாகும். அங்குதான் நாட்டின் தேசிய பாதுகாப்பு, சுயாதீனம் பாதுகாக்கப்படுகின்றது. அதனால் அரசாங்கம் இன, மத பேதங்கள் ஏற்படாமல் நாட்டு மக்களை மீட்டிக்கொள்ள வேண்டும். அதற்காக விஞ்ஞான ரீதியிலான தீர்மானங்களுக்கு முன்னுரிமை வழங்கி சாஸ்திரங்களில் இருந்து விடுபட வேண்டும். ஒரு மதத்துக்கு மாத்திரம் அல்ல, அனைத்து மதங்களின் உரிமையும் பாதிக்கப்படுகின்றது.

அதனால் நீதியான, விஞ்ஞான ரீதியிலான உண்மைக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும். சத்தியத்துக்காக குரல் கொடுக்க நாங்கள் ஒருபோது பின்வாங்கப் போவதில்லை. நாங்கள் எப்போதும் அடிப்படைவாதம் பயங்கரவாதத்துக்கு எதிராகவே இருக்கின்றோம். அதனால் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் அதனை திட்டமிட்டவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கின்றோம்.

அவ்வாறான தீர்மானம் எடுப்பதற்கு இந்த அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லை. அத்துடன் பயங்கரவாதத்தை அழிப்பதாக தெரிவித்துக் கொண்டு இனங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாங்கள் எதிர்ப்போம். அதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றார்.

No comments:

Post a Comment