யாழ். காரைநகரில் அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்புடைய 43 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் எவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்கள் கடந்த சனிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனர்.
கடந்த 21ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு சென்ற அவர், 3 நாட்களுக்கு மேல் பல இடங்களுக்கு நடமாடிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை அவரது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
இதையடுத்து காரைநகர், சங்கானை மற்றும் யாழ்ப்பாணம் மாநகரம் ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகளில் குறித்த நபருடன் தொடர்புடையவர்களிடம் 43 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு. அவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களின் மாதிரிகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அனைவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. காரைநகரில் தனிமைப்படுத்தப்பட ஏனையவர்களுக்கும் படிப்படியாக பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படும்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் வட மாகாணத்தைச் சேர்ந்த 70 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அனைவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது, என்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment