மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் பலசரக்கு கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகள், கோழிக்கடைகள், பேக்கரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து கடைகளும் இன்று வியாழக்கிழமை 31 திகதியில் இருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 3 தினங்களுக்கு பூட்டப்படும் என மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.
மாநகர சபையில் இன்று வியாழக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் நேற்று புதன்கிழமை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டது.
இதனடிப்படையில் குறித்த வர்த்தக நிலையங்களுக்கு வந்து சென்றவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் இந்த செயற்பாடு முடியும் வரை வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனவே சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகர சபை இன்று எடுத்த தீர்மானத்தின்படி எதிர்வரும் 3 தினங்களுக்கும் தொடர்ந்து வர்த்தக நிலையங்களை மூட முடிவு செய்துள்ளோம்.
இதில் பலசரக்கு கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகள், கோழிக்கடைகள், பேக்கரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து கடைகளும் பூட்டுவதாக முடிவு செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை மீறுபவர்களுக்கு எதிராக மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் கீழ் கொரோனா சட்டத்தின் கீழும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை குறிப்பாக வியாபார நிலையங்களை திறந்து வியாபாரம் நடாத்துக்கின்ற வியாபாரிகள் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும்.
பல கடைகளில் முகக் கவசம் அணியவில்லை மற்றும் இடைவெளி பேணப்படவில்லை, கைகழுவுவதற்கான வசதிகள் இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றை பின்பற்றி நீங்கள் வியாபார செயற்பாட்டை செய்யவேண்டும்.
அதேவேளை மாநகர சபை பகுதியில் கொரோனா தொற்று வராமல் பாதுகாக்க அனைவரது ஒத்துழைப்பையும் நல்குமாறு கேட்டுக் கொள்வதுடன் நாளை நடக்கவிருக்கும் புதுவருட ஆராதனையில் பெரிய தேவாலயங்களில் 50 பேரும் சிறிய தேவாலயங்களில் 25 பேரும் அனுமதிக்கபடும் என்ற விதிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment