தனிமைப்படுத்தல் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடு - கண்காணிப்பில் விசேட பொலிஸ் குழுக்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

தனிமைப்படுத்தல் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடு - கண்காணிப்பில் விசேட பொலிஸ் குழுக்கள்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த பகுதிகளை விட்டு எந்தக் காரணத்துக்காகவும் செல்ல முடியாது. அவ்வாறு செல்வது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பான செயற்பாடாகும். 

இந்நிலையில், இந்த பகுதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக விசேட பொலிஸ் குழுவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களும் தங்களது வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மேல் மாகாணத்திலிருந்து வெளிப் பிரதேசங்களுக்கு செல்லும் நபர்களுக்கான அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கு பயன்படுத்தப்படும் 11 பகுதிகளில் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய சுகாதார பிரிவு, பாதுகாப்பு பிரிவு மற்றும் பொலிஸாரின் இது போன்ற செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் நாம் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

இதேவேளை, பொதுப் போக்குவரத்து சாதனங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளை சோதனை செய்வதற்காக சிவில் உடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் பொதுமக்கள் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதுடன், வீதி விபத்துகள், கொள்ளையர்களிடமிருந்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இந்நிலையில், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் என்பன கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளாகும். அதற்கமைய இந்த சட்டவிதிகளை மீறியதாக முடிவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த அக்டோபர் மாதம் 30 திகதி முதல் இதுவரையில் 1,705 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனால் நாட்டில் எந்த பகுதியில் வசித்து வந்தாலும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களிடம் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment