வவுனியா வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்தினருக்கு பிடியாணை பிறப்பித்தது நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 13, 2020

வவுனியா வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்தினருக்கு பிடியாணை பிறப்பித்தது நீதிமன்றம்

வவுனியா வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 

நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்த ஒக்டோபர் மாதம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஆலயத்தின் சார்பில் தலைவர் சசிகுமார், செயலாளர் தமிழ்செல்வன், பூசகர் மதிமுகராசா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

நீதிமன்றில் ஆஜராகியிருந்த பொலிசார் ஆலய நிர்வாகத்தினரை கைது செய்ய வேண்டும் என்றும், தொல்பொருள்கள் சார்ந்த விடயம் என்பதால் வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை ஆலய நிர்வாகத்தினரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றும் நீதவானிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

எனினும் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் ஆலய நிர்வாகத்தினர் விடுவிக்கப்பட்டதுடன் நவம்பர் 6 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

கடந்த நவம்பர் 6 ஆம் திகதி ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றில் மீண்டும் ஆஜராகிய நிலையில் கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக அனேகமான வழக்குகள் விசாரணைகளிற்கு அழைக்கப்படாமல் தவணை இடப்பட்டிருந்தது. அந்த வகையில் 2021 ஆம் வருடம் தை மாதத்திற்கு வழக்குகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கினை முன்னமே அழைக்குமாறு தொல்பொருட் திணைக்களம் மற்றும் பொலிசார் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகளால் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட, நிலையில் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு வழக்கு அழைக்கப்பட்டது.

எனினும் வழக்கின் திகதி மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் தமக்கு தெரியப்படுத்தவில்லை என்று தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர் இதனால் அன்றையதினம் நீதிமன்றிற்கு சமூகமளிக்கவில்லை என்று தெரிவித்தனர். அவர்கள் ஆஜராகமையால் ஆலய நிர்வாகத்தினருக்கு நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment