சிறந்த வருடாந்திர விண்கல் மழைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜெமினிட் விண்கல் பொழிவை இலங்கையினர் இன்று இரவு காண முடியும்.
இந்த மாதம் 17 ஆம் திகதி வரை ஜெமினிட் விண்கல் பொழிவு தெரியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தனா ஜெயரத்ன கூறியுள்ளார்.
இன்றிரவு 10 மணி முதல் அதிகாலை வரை இருண்ட வான் பரப்புகளில் இதனை அவதானிக்க முடியும். பொதுமக்கள் ஒரு மணி நேரத்திற்கு 120 அல்லது அதற்கு மேற்பட்ட விண்கற்களைக் காண முடியும்.
ஆங்கிலத்தில் ஜெமினிட்ஸ் என்று சொல்லப்படும் இந்த எரிகல் மழை உச்சத்தை அடையும் சமயத்தில் ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான எரிகற்களை நாம் காண முடியும்.
விண்கற்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தவுடன் எரிந்து சாம்பலாவதால் ஏற்படும் நெருப்புச் சிதறல் நட்சத்திரம் புஸ்வாணம் போல சீறிப் பாய்வதாக காட்சியளிக்கும்.
மேகமூட்டமில்லாமல் வானம் தெளிவாக இருக்கும் இடங்களில் தொலைநோக்கிகள் இல்லாமல் வெறும் கண்ணுக்கே இந்த எரிகல் மழை தென்படும்.
இயற்கையாகத் தோன்றும் அற்புதமான வாண வேடிக்கையாக இந்த எரிகல் மழை அமையுமென வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment