(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
நாட்டின் குற்றப் புலனாய்வுப் பிரிவை கடந்த அரசாங்கம் செயலிழக்கச் செய்திருக்காவிட்டால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்கலாம். என்றாலும் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்துக்கு முன் நிறுத்துவோம் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நீதி மற்றும் தொழில் அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை இல்லாமலாக்கி, இன்று நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்குமாறு எங்களுக்கு தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவை அமைத்து அரசியல் பழிவாங்கலை மேற்கொண்டார்கள். எனக்கு எதிராகவும் பாெய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தொடுத்தார்கள். அரசியல் எதிரிகளைப் பழிதீர்க்கவே பொலிஸாரை பயன்படுத்தி வந்தார்கள்.
மேலும் கடந்த அரசாங்கம் குற்றப் புலனாய்வுப் பிரிவை செயலிழக்கச் செய்திருக்காவிட்டால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதை தடுத்திருக்கலாம். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை இடம்பெற்று வருகின்றது. நாங்கள் விசாரணைகளை மறைக்கவில்லை. இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டிருக்கும் அனைவரையும் சட்டத்துக்கு முன்நிறுத்துவோம்.
அரசியல்வாதிகளை இந்த விசாரணைக்கு அழைப்பது தொடர்பில் எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். யாரை வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைப்போம்.
மேலும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர். மத்திய வங்கி மோசடியுடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் தற்போது விசாரணை இடம்பெறுகின்றது.
காசோலைகளைக் கைமாற்றியவர்கள் இந்த பாராளுமன்றத்திலும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு எதிராகவும் சட்டம் நிலைநாட்டப்படும் என்றார்.
No comments:
Post a Comment