(நா.தனுஜா)
தம்மிக பண்டார என்ற நபரால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு பானத்தை 'போசணை நிறைந்த ஆயுர்வேத பானம்' என்ற அடிப்படையிலேயே நாம் பரிந்துரை செய்தோம். எனினும் அது உரிய மருத்துவ மற்றும் இரசாயனப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே மருந்துப் பொருளாக அறிவிக்கப்படும் என்று சுதேச வைத்தியமுறை மேம்பாடு மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.
இது குறித்து இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி மேலும் கூறியிருப்பதாவது, நான் அதனை அருந்துவதற்கு சபாநாயகருக்கு மாத்திரமே அழைப்பு விடுத்தேன். ஒட்டு மொத்த பாராளுமன்றத்திற்கும் அதனை வழங்கவில்லை.
அத்தோடு போசணை நிறைந்த ஒரு ஆயுர்வேத பானம் என்ற அடிப்படையிலேயே நாம் அதனை வழங்கினோம். எமது உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத பானங்கள் மற்றும் உணவுகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தேவையற்ற அச்சத்தை விதைத்து வருகின்றனர்.
ஆனால், அவ்வாறு அச்சப்படுவதற்கான எந்தவொரு அவசியமும் இல்லை. அந்த ஆயுர்வேத பானம் உரிய மருத்துவ மற்றும் இரசாயனப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே மருந்தாக மாறும். அதற்கு குறித்தவொரு காலம் அவசியமாகும்.
அத்தோடு தம்மிக பண்டார மாத்திரமன்றி எமது நாட்டிலுள்ள மேலும் பல ஆயுர்வேத நிலையங்களும் மருத்துவர்களும் தமது உற்பத்திகளைக் கையளித்திருக்கிறார்கள். அவை தொடர்பிலும் நாம் விசேட கவனம் செலுத்துவோம் என்றார்.
No comments:
Post a Comment