(இராஜதுரை ஹஷான்)
2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் இறுதித் தீர்மானம் இரு நாட்களுக்குள் எடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வருடம் பரீட்சை நடத்த முடியாமல் போனால் மாணவர்கள் பரீட்சைக்கு தயாராக மேலதிகமாக 6 வார காலம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீறிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், மேல் மாகாணத்தில் கொவிட்-19 வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் பாடசாலைகள் திறக்கப்படவில்லை. இக்காரணத்தால் ஏனைய மாகாணங்களில் பாடசாலைகள் தொடர்ந்து மூடுவது சாதாரண விடயமல்ல, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் கடந்த மாதம் 23 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டன.
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் அவசர நிலையில் மூடல் உள்ளிட்ட தீர்மானங்களை இசுறுபாய எடுக்கவில்லை. அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் இவ்விடயம் குறித்து விசேட சுற்றறிக்கை அனுப்பி வகுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் வருகை 50 சதவீதமாகவும், ஆசிரியர்களின் வருகை 80 சதவீதமாகவும் காணப்படுகிறது.
இந்த நிலை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்த பலதரப்பட்ட மட்டத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகின்றன.
இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற 6 இலட்சத்து 21 ஆயிரம் விண்ணப்பித்துள்ளார்கள். நாடு தழுவிய ரீதியில் 10160 பாடசாலைகள் உள்ளன ஆனால் தற்போது தரம் 11 க்கான கற்பித்தல் நடவடிக்கை 5100 பாடசாலைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றன.
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடத்த ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த தினத்தில் பரீட்சையை நடத்துவதா அல்லது இன்னும் பிற்பொடுவதா என்பது குறித்த இறுதித் தீர்மானத்தை 2 நாட்களுக்குள் எடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பரீட்சையை நடத்த புதிய திகதி அறிவிக்கப்படுமாயின் மாணவர்கள் பரீட்சைக்கு தயாராக மேலதிகமாக 6 வார காலம் வழங்கப்படும். குறித்த காலப்பகுதியில் 11 ஆம் தர மாணவர்களின் பாடத்திட்டம் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதற்கான விசேட நடவடிக்கை கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment