இலங்கை மருத்துவ சபைக்குள் ஏற்படுத்தப்பட்ட இருண்ட யுகத்தை இல்லாமல் செய்ய வேண்டும் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, November 27, 2020

இலங்கை மருத்துவ சபைக்குள் ஏற்படுத்தப்பட்ட இருண்ட யுகத்தை இல்லாமல் செய்ய வேண்டும் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(நா.தனுஜா)

இலங்கை மருத்துவ சபையின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு விட்டதாகவும மருத்துவ சபையின் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது.

எனவே அதன்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இலங்கை மருத்துவ சபைக்குள் ராஜித சேனாரத்னவினால் ஏற்படுத்தப்பட்ட இருண்ட யுகத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே மற்றும் வைத்திய நிபுணர் ஷனேல் ஆகியோர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். 

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது 1924 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மருத்துவ சபை பிரதானமாக இரண்டு பொறுப்புக்களைக் கொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதி செய்வதும் மருத்துவர்களின் தகைமையை உறுதி செய்வதுமே அவையாகும்.

எனினும் ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலகட்டத்தில் இலங்கை மருத்துவ சபை மருத்துவக் கல்வியினதும் மருத்துவர்களினதும் தரத்தை முறையாகப் பேணும் வகையில் செயற்படவில்லை என்பதை ஏற்கனவே நாம் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

குறிப்பாக சைட்டம் உயர் கல்வி நிறுவனம் தொடர்பான சர்ச்சை ஏற்பட்டபோது ராஜித சேனாரத்ன அக்கல்வி நிறுவனத்திற்கு ஆதரவாக செயற்பட்டமை அனைவருக்கும் நினைவிருக்கும். 

அதேபோன்று மருத்துவக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான மிகக் குறைந்த கல்வித் தகைமை நிர்ணயத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டதன் ஊடாக மருத்துக் கல்வியின் தரத்திலும் தாக்கம் ஏற்படுத்தப்பட்டது.

ராஜித சேனாரத்ன அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அவருடைய தனிப்பட்ட அலுவலக உத்தியோகத்தர்களும் அரசியல் ரீதியில் நெருக்கமானவர்களும் இலங்கை மருத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டனர். இலங்கை மருத்துவ சபையின் தற்போதைய தலைவர் பேராசிரியர் ஹரீந்திர சில்வாவும் ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக இருந்தபோது நியமிக்கப்பட்டார்.

அவரைப் பற்றி எமக்கும் ஜனாதிபதிக்கும் சுகாதார அமைச்சிற்கும் தனி நபர்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அவரது மேற்படிப்பின் போது உரிய விதிமுறைகளை மீறியமை குறித்தும் குழந்தை மருத்துவ பயிற்சியின் போது அவரால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல்கள் குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன.

இது குறித்து நாம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் முறைப்பாடு செய்தமையைத் தொடர்ந்து அவர் இதுபற்றிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கான 5 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்திருந்தார்.

அந்தக் குழுவின் அறிக்கை தற்போது சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு விட்டதாகவும் மேற்படி முறைகேடுகள் தொடர்பில் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் அறியக்கிடைத்திருக்கிறது. 

எனவே அதன்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இலங்கை மருத்துவ சபைக்குள் ராஜித சேனாரத்னவின் இருண்ட யுகத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் சுகாதார அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment