(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கொரோனாவிற்கான தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனமோ, உலக நாடுகளோ இன்னமும் முழுமையான அங்கீகாரத்தை கொடுக்காத நிலையில் தடுப்பூசிகளை எமது மக்களிடம் பரிசோதித்துப் பார்க்க இடமளிக்க முடியாது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட வேளையில் ஏனைய நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் நாம் எமது நாட்டையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்தோம்.
இரண்டாம் அலையாக இப்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் உருவாகியுள்ளது. இன்றுவரை சரியான தீர்மானங்கள் முன்னெடுத்து வைரஸை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தும் வருகின்றோம்.
எனினும் தடுப்பூசி ஏன் கொண்டுவரவில்லை என்ற கேள்வி எழுகின்றது. ஆனால் கொரோனாவுக்கான தடுப்பூசி குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் இன்னமும் அங்கீகாரம் கொடுக்கவில்லை, ஏனைய நாடுகளும் கூட இன்னமும் தடுப்பூசியை உறுதிப்படுத்தவில்லை, அவ்வாறான நிலையில் தடுப்பூசியை எமது மக்களிடம் பரிசோதித்துப் பார்க்க எம்மால் இடமளிக்க முடியாது.
உலக சுகாதார ஸ்தாபனம் இந்த தடுப்பூசி குறித்த அங்கீகரத்தை உறுதிப்படுத்தும் நிலையில் நாம் எமது மக்களுக்கு சரியான தடுப்பூசியை வழங்குவோம் என்றார்.
No comments:
Post a Comment