(க.பிரசன்னா)
2021 ஆம் ஆண்டுக்காக அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது மாப்பியாக்களுக்கும் கொள்ளைக் காரர்களுக்கும் அடிவருடிகளுக்கும் கை கொடுக்கின்ற வரவு செலவுத் திட்டமாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
கொழும்பு எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர், மேலும் தெரிவிக்கையில், இவ் வரவு செலவுத் திட்டத்தில் கறுப்பு பணத்தை கொண்டு வருவதை அனுமதிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் யார்? கொள்ளைக்காரர்கள், கொலைக் கும்பல்கள் மற்றும் சட்டவிரோத வியாபாரங்களில் ஈடுபடுவோரிடமே கறுப்பு பணம் இருக்கின்றது.
இந்த அரசாங்கத்தில் முன்வரிசையிலுள்ள அமைச்சர்கள் மீதும் மற்றும் பலரின் மீதும் கடந்த காலத்தில் கொள்ளையடித்த பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தது. எனவே தங்களுடைய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக கைகொடுத்திருக்கின்ற சகாக்களுக்காக உருவாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகவே இது காணப்படுகின்றது.
இந்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ளவர்களிடமோ, தோட்டப்புறங்களில் உள்ளவர்களிடமோ, சிறு வியாபாரங்களை மேற்கொள்பவர்களிடமோ கறுப்பு பணம் இல்லை. இந்த ஏற்பாடு இந்த அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுக்கும் சகபாடிகளுக்குமான ஏற்பாடு என்பதுடன் இந்நாட்டிலுள்ள கொவிட் பிரச்சினையை முற்றாக மூடி மறைத்து இந்த வரவு செலவுத் திட்டத்தினை கொண்டுவந்துள்ளது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment