கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலர் உயிரிழந்த நிலையில் வீதியோரங்களில் இருந்து மீட்கப்பட்டதாக போலிச் செய்தியை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட சந்தேக நபர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய பலர் வீதியோரங்களில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளத்தில் போலிச் செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். கணினி குற்றவியல் விசாரணை பிரிவினரும் அது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த போலிச் செய்தியை பதிவிட்டமை தொடர்பில் கடுகன்னாவ - ஹெகொட ஹேணகல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் இன்று சனிக்கிழமை கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 53 பேர் உயிரிழந்துள்ளதுடன், யாசகர் ஒருவர் மாத்திரமே வீதியோரத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த போலிச் செய்தியை வெளியிட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தமை தொடர்பில் மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கணனி குற்றவியல் விசாரணை பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். அதற்கமைய இவ்வாறான போலிச் செய்திகளை பதுவிடுவதிலும், அவற்றை பகிர்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment