க.பொ.த. சாதாரண தரப் பரீட்டைக்கு விசேட சுகாதார வழிகாட்டல்களை வழங்குமாறு கோரியது கல்வி அமைச்சு! - News View

About Us

About Us

Breaking

Sunday, November 22, 2020

க.பொ.த. சாதாரண தரப் பரீட்டைக்கு விசேட சுகாதார வழிகாட்டல்களை வழங்குமாறு கோரியது கல்வி அமைச்சு!

ஜனவரியில் நடைபெறவிருக்கும் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின்போது கடைப்பிடிப்பதற்கு விசேட வழிகாட்டல்களை வழங்குமாறு கல்வி அமைச்சு சுகாதாரத் துறையை கேட்டிருப்பதாக அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.

அடுத்த வருடம் இந்த பரீட்சைக்கு சுமார் 7 இலட்சம் மாணவர்கள் தோற்றுகிறார்கள். பரீட்சையை நடத்துவதற்கு விசேட வழிகாட்டல்கள் தேவைப்படும் என்று பேராசிரியர் பெரேரா கூறினார். அடுத்த வருடம் ஜனவரி 18 தொடக்கம் 28 வரை பரீட்டையை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

கொவிட்-19 தொற்று நோய்க்கு மத்தியிலும் கடந்த மாதம் க.பொ.த. உயர் தரப் பரீட்சையை கல்வித் துறையினராலும் சுகாதாரத் துறையினராலும் வெற்றிகரமாக நடத்திமுடிக்கக் கூடியதாக இருந்த போதிலும், சாதாரண தரப் பரீட்சையில் கூடுதல் எண்ணிக்கையிலான மாணவர்கள் சகல மண்டபங்களிலும் இருப்பார்கள் என்பதால் விசேட சுகாதார வழிகாட்டல்கள் அவசியமாகின்றன. பரீட்சையை நடத்துவதில் சுமார் 35 ஆயிரம் ஆசிரியர்களும் பங்கேற்கிறார்கள் என்றும் பெரேரா கூறினார்.

இந்த பரீட்சைக்காக வழிகாட்டல்களை தயாரிப்பதில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

அதேவேளை, வழமையாக டிசம்பர் மாதத்தில் நடைபெறுகின்ற இந்த பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்படுவதை தவிர்க்கும் நோக்குடன் பரீட்சைக்கான ஏனைய ஏற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன என்று கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

பாடசாலைகளினால் சாதாரண தரப் பாட விதானங்களை பூர்த்தி செய்ய இயலாமல் போனதையும் கருத்தில் எடுத்தே வினாத்தாள்கள் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

எந்தளவுக்கு பாட விதானங்களை பாடசாலைகள் பூர்த்தி செய்திருக்கின்றன என்பதை அறிய கல்வி அமைச்சு ஆய்வொன்றை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது.

No comments:

Post a Comment