நானூஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்படட்ட சமர்சட் தோட்டத்தில் 73 வயதுடைய மாமியாரை 20 அடி பள்ளத்தில் மருமகள் தள்ளிவிட்டதனால் அவர் உயிரிழந்த சம்வபம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (01) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
73 வயதுடைய மாமியாருக்கும், அவரது 23 வயதுடைய மருமகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பாக தெரிவதாவது, நுவரேலியா தலவாக்கலை பிரதான வீதிக்கு அருகாமையில் இருக்கும் வீட்டு குடியிருப்பில் நேற்று (01) அதிகாலை 5.00 மணி அளவில் குறித்த மாமியாருக்கும் மருமகளுக்குமிடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது மாமியாரை 20 அடி பள்ளத்தில் மருமகள் தள்ளி விட்டார் என்று அயலவர்கள் நால்வர் நானூஓயா பொலிஸில் புகார் செய்துள்ளனர்.
மேலும் பள்ளத்தில் வீழ்ந்த மாமியாரை தோட்டமக்கள் நேற்று (01) காலை நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (02) உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேகநபரான மூன்று பிள்ளைகளின் தாயாரான, முன்பள்ளி ஆசிரியர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக, நானுஓயா பொலிஸ் பொறுப்பதிகாரி சுகத் விஜயாசித் தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபரின் கணவர் சுகவீனமுற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவரின் சடலம், நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானூஓயா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(பூண்டுலோயா நிருபர் - பிரசாந், டி. சந்ரு)
No comments:
Post a Comment