(ஆர்.ராம்)
புதிய அரசியலமைப்புக்கான பொதுமக்கள் முன்மொழிவுக்காக கால எல்லையை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பினை வரைவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் 09 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவொன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவினால் வரைவொன்று தயாரிக்கப்படுவதற்காக பொதுமக்களின் முன்மொழிவுகளைச் செய்வதற்கு இம் மாதம் 30 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்கால சூழல்களுக்கு அமைவாக, இக் காலப்பகுதியை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கவுள்ளப்படவுள்ளன.
எதிர்வரும் டிசம்பர் மாத இறுதி வரையில் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான கால எல்லையை அதிகரிப்பதற்கே பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
புதிய அரசியலமைப்பு வரைவினை தயாரிப்பதற்காக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடத்திலிருந்து அரசின் தன்மை, அடிப்படை உரிமைகள், மொழி, அரச கொள்கைகள், நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, வாக்களிப்புத்தத்துவம் மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பு, அதிகாரத்தினை பன்முகப்படுத்தல், நீதித்துறை, பகிரங்க நிதி, பொதுமக்கள் பாதுகாப்பு உட்பட அக்கறை செலுத்தப்பட வேண்டிய பிற விடயங்கள் தொடர்பில் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment