போதைப் பொருள் பாவனைக்குள்ளான தொற்றாளர்களுக்கு பாதுகாப்புடன் சிகிச்சையளிக்க நடவடிக்கை - பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

போதைப் பொருள் பாவனைக்குள்ளான தொற்றாளர்களுக்கு பாதுகாப்புடன் சிகிச்சையளிக்க நடவடிக்கை - பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

(செ.தேன்மொழி) 

போதைப் பொருள் பாவனை மற்றும் கடத்தலுடன் தொடர்பான வைரஸ் தொற்றாளர்களுக்கு பாதுகாப்புடன் சிகிச்சையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிலர் தப்பிச் சென்றுள்ளதுடன், பலர் முயற்சித்தும் உள்ளனர். இவர்கள் அனைவருமே போதைப் பொருள் பாவனை அல்லது போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்பு கொண்டவர்களே. அதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர்களுள் சிலர் தொடர்ந்தும் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்து வருகின்றனர். 

அதற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கொட தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞன் ஒருவன் தப்பிச் செல்ல முயற்சித்த போது, வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினர் அவரை மடக்கி பிடித்துள்ளனர்.

இதேபோன்று கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னர், றாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவரும் தப்பிச் சென்றிருந்தார். சாலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவனும் அண்மையில் தப்பிச் சென்றிருந்தார்.

அதற்கமைய கடந்த வியாழக்கிழமை இரவு அங்கொட தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் அவரது இரண்டரை வயதுடைய பிள்ளையுடன் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இவர்கள் அனைவரும் தற்போது பிடிக்கப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைகள் பாதுகாப்பான முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் இவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துகையில், இவர்கள் அனைவருமே போதைப் பொருள் பாவனை அல்லது கடத்தலுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment