அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் துரிதப்படுத்தப்படும் - ஜீவன் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 29, 2020

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் துரிதப்படுத்தப்படும் - ஜீவன் தொண்டமான்

நோர்வூட்டில் தீ விபத்தால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு வெகுவிரைவில் பாதுகாப்பான இடத்தில் தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். அதேபோல பெருந்தோட்டப் பகுதிகளில் ஏற்கனவே அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்களும் துரிதப்படுத்தப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நோர்வூட், நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவிலுள்ள மூன்றாம் இலக்க லயன் குடியிருப்பில் நேற்று முன்தினம் (27) ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 13 குடும்பங்களைச் சேர்ந்த, 57 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனையின் பிரகாரம் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளரும், அரச அதிகாரிகளும் முன்னெடுத்திருந்தனர்.

இதன்படி அயரபி பாடசாலையிலும், அத்தோட்டத்திலுள்ள பழைய தொழிற்சாலை கட்டடத் தொகுதியிலும் நிர்க்கதியான மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளும் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிவ்வெளிகம பிரிவுக்கு நேற்று (28) களப்பயணம் மேற்கொண்டார்.

மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

குறிப்பாக தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என கூறியதுடன், அதற்காக பாதுகாப்பான இடம் தெரிவு செய்யப்படும். தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டு, விரைவில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறினார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை தனது அமைச்சின் ஊடாகவும், நோர்வூட் பிரதேச சபை ஊடாகவும் வழங்குமாறும் ஜீவன் பணிப்புரை விடுத்தார்.

அதேவேளை, மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் ஏற்கனவே அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் துரிதப்படுத்தப்படும் என்ற உறுதிமொழியையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இதன்போது வழங்கினார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment