(செ.தேன்மொழி)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன ? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வி எழுப்பிய ,அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அரசாங்கம் எடுக்கும் அனைத்து தீர்மானங்கள் தொடப்பிலும் மக்களே பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இன்று மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுத்து வருகின்றனர். பலரது தொழில் வாய்ப்புகளும் இல்லாமல் போயுள்ளன. எமது நாட்டில் அதிகளவாக நாளாந்தம் ஊதியம் பெற்று வாழ்ந்து வருபவர்களே இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களின் நிலைமை இன்று கேள்விக்குறியாகவே உள்ளது.
நாட்டு மக்கள் போதிய வருமானம் இல்லாததன் காரணமாக கடந்த காலங்களில் தங்களிடம் இருந்த தங்க நகைகளை வைப்பிலிட்டு பெற்றுக் கொண்ட பணத்திலே வாழ்ந்து வந்துள்ளனர். அதற்கமைய கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம் 643 பில்லியன் ரூபாவுக்கு தங்க நகைகள் வைப்பிலிடப்பட்டுள்ளன. தற்போது அவர்களிடம் வைப்பிலிடுவதற்கு நகைகளும் இருக்காது.
இந்நிலையில் மக்களின் வாழ்வதாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? அரசாங்கம் வெறுமனே வர்த்தமானி அறிவித்தல்களை மாத்திரமே வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் இவர்கள் அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்தே உள்ளனர்.
No comments:
Post a Comment